Sunday, November 9, 2008

நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வைத்தியநாத சுவாமி!

நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வைத்தியநாத சுவாமி! Search similar articles
- கா. அய்யநாதன், புகைப்படங்கள் : சீனி
ஞாயிறு, 15 ஜூன் 2008( 16:23 IST )

webdunia photo WD
நமது நாட்டிலுள்ள சிவபெருமானின் புனிதத் தலங்களில் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றது வைத்தீஸ்வரன் கோயில். இப்புவியில் மனிதனை வாட்டி வதைக்கும் 4,480 நோய்களை தீர்க்கும் வைத்தியநாதராய் இத்திருத்தலத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

இக்கோயிலிற்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. இராமாயணத்தில், சீதையை இராவணன் கடத்திச் சென்ற போது ஜடாயு என்ற கழுகு, இராவணின் பல்லக்கை தடுத்து சீதையை காக்க முற்பட்டபோது, இராவணனால் வெட்டப்பட்டு இரு சிறகுகளையும் இழந்து இத்தலத்தில்தான் விழுந்துகிடந்தது. சீதையை தேடி இராமனும், லட்சுமணனும் வந்தபோது, அவர்களிடம் சீதை கடத்தப்பட்டதைத் தெரிவித்துவிட்டு உயிரை விட்ட ஜடாயு இத்தலத்தில் எரிக்கப்பட்ட இடம்தான் ஜடாயு குண்டம் என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஜடாயு குண்டத்தில் விபூதி பெற்றுச்செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.

இராவணனை போரில் வென்று சீதையை மீட்ட இராமனும், லட்சுமணனும் இக்கோயிற்கு வந்து சிவபெருமானின் அருளைப் பெற்றுச் சென்றாக இத்திருத்தலப் புராணம் கூறுகிறது.

தையல் நாயகி அம்மை!

இத்திருத்தலத்தில் வைத்தியநாதருடன் தையல் நாயகி என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள பார்வதி, பத்மா சூரனை வெல்ல முருகன் புறப்பட்டபோது அவருக்கு சக்திவேல் கொடுத்து ஆசிர்வதித்த்தும் இத்திருத்தலத்தில்தான்.

webdunia photo WD
அங்காரகன் (செவ்வாய்) தொழு நோயால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இத்திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு, மருந்தைப் பெற்று குணமுற்றதால், செவ்வாய்க் கிரகத்திற்குரிய நவகிரகத் தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அங்காரகனுக்கு தனிச் சன்னதி உள்ளது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்கின்றனர்.

No comments: