Tuesday, September 9, 2008

ஆரன்முளா கிருஷ்ணன் கோவிலில் ஜேசுதாஸ்

கிருஷ்ணரை பாடும் ஜேசுதாஸ் ஆசை நிறைவேறியது

கோயிலுக்குள் சென்று கிருஷ்ணனைப் பாட வேண்டும் என்ற பிரபல பாடகர் ஜோசுதாசின் ஆசை ஒருவழியாக நிறைவேறிவிட்டது, பல ஆண்டுகளுக்குப் பிறகு.

கிருஸ்தவரான ஜேசுதாஸ், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நுழைய பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி மறுக்கப்பட்டது. கிருஸ்தவராக இருந்தாலும் தீவிரமான கிருஷ்ண பக்தர் ஜோசுதாஸ்.

ஆனாலும், குருவாயூர் கோயில் அதிகாரிகளின் எதிர்ப்புக்கு மறுமொழி கூறாமல் அமைதியாகிவிட்டார். ஆனால் ஏராளமான கிருஷ்ணன் மற்றும் ஐயப்பன் பாடல்களைப் பாடி வந்தார் (ஐயப்பன் கோயிலில் ஜோசுதாசுக்கு அனுமதி உண்டு).

அவர் நேரடியாக கோயிலுக்குள் நுழைந்து பாடவில்லையென்றாலும், அவரது பாடல்கள் ஒலிக்காத கோயில்களே இல்லை எனும் அளவுக்கு அவரது பக்திப் பாடல்கள் பிரபலம்.

தனது பல பேட்டிகளில், குருவாயூர் கோயிலுக்குள் நுழைய முடியவில்லையே என்ற ஏக்கத்தை மட்டும் வெளிப்படையாகத் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஆரன்முளா பகுதியில் உள்ள பிரபல கிருஷ்ணன் கோவிலுக்கு அவர் சென்றார்.

அவரை கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் வரவேற்று அழைத்துச் சென்றனர். பாரம்பரிய வஞ்சிப் பாட்டு (படகுப் பாட்டு) பாடி, அவரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோவில் வழக்கப்படி, சட்டையை கழற்றி விட்டு உள்ளே சென்ற ஜேசுதாஸ், கிருஷ்ணனுக்கு நடந்த பந்தீரடி பூஜையில் பங்கேற்று மனமுருகப் பாடி வழிபட்டார்.

அந்த மலையாளப் பாடலின் விளக்கம்:

கிருஷ்ணா, நீ ஏன் என் மீது கருணை காட்டவில்லை;
எங்கும் இருப்பேன் என்று நீ சொன்னாயே,
அப்படித்தான் நான் இப்போதும் உன்னை நெஞ்சில் நிறுத்தி மகிழ்கிறேன்...'

ஜேசுதாஸூடன் பக்தர்களும் இந்தப் பாடலை பாடி பரவசப்பட்டனர்.

ஆரன்முளா பகுதி பந்தனம் திட்டாவில் அமைந்துள்ள முக்கிய வழிபாட்டுத்தலம் ஆகும். இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியில்தான் கேரளாவின் புகழ்பெற்ற படகுப் போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது.

இங்குள்ள பார்த்தசாரதி கோயில் மிகவும் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த்து. இக்கோயிலில் உள்ள கிருஷ்ணர் விக்கிரகம் பாண்டவர்கள் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

No comments: