Tuesday, June 17, 2008

ஏன் இந்துக்கள் விக்கிரக ஆராதனை செய்கிறார்கள்?

ஏன் இந்துக்கள் விக்கிரக ஆராதனை செய்கிறார்கள்?
from எழில்

விக்கிரக வழிபாட்டை விமர்சிப்பதேன்?

கேள்வி : ஹிந்து கிறிஸ்துவ மதத்தினர் மனதை ஓர்மைப்படுத்தவே விக்கிரகங்களை வைத்துள்ளனர். மற்றபடி விக்கிரகத்தின் வழியே ஏக இறைவனையே வணங்குகின்றனர். அதை ஏன் குறை காண்கிறீர்கள்?

என்று கேட்டதாக பதில் கூறி நண்பர் ஒருவர் இஸ்லாமை பாராட்டி எழுதியிருக்கிறார். அதற்கான பதில்கள்

--
தவறான கேள்வி. இந்துக்கள் எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளை விக்கிரகங்களில் வழிபடுகின்றனர். எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளை இந்துக்கள் வணங்குவதால், விக்கிரகங்களிலும் இருப்பது பரம்பொருளே. வணங்குபவனும் வணங்கப்படுபவனும் ஒன்றே. இதனை அறிவதற்கே பாம்பு - பழுதை உவமானங்கள் கூறப்பட்டன. கயிறு இருட்டில் கிடப்பதை பார்க்கும் மனித மனம் அதனை பாம்பு என்று அஞ்சுகிறது. சற்று அருகே சென்று பார்க்கும் போது அது வெறும் கயிறு என்று தெரிந்துகொள்கிறது. மனிதனது மனம் மாயையால் கட்டுண்டு கிடப்பதால், உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை உலக பிரச்னைகளில் சிக்கியுள்ள மனிதனால் பார்க்க முடியவதில்லை.

அதனால், உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களும் வணக்கத்துக்குரியதாகிவிடுகின்றன. நிலம், நீர், நெருப்பு நீர், காற்று ஆகாயம் ஆகிய அனைத்துமே இந்துக்களின் வணக்கத்துக்குரியன. அதனாலேயே நில லிங்கம், நீர் லிங்கம், நெருப்பு லிங்கம், காற்று லிங்கம், ஆகாய லிங்கம் ஆகியவை வணங்கப்படுகின்றன. மரங்களும், செடி கொடிகளும், ஆறுகளும், போற்றப்படுகின்றன. ஒவ்வொரு கோவிலிலும் அதனாலேயே திருத்தல மரங்கள் இந்துக்களால் வணங்கப்படுகின்றன.

அடுத்த கேள்வி. உலகெங்கும் இறை நீக்கமற நிறைந்திருந்தால், ஏன் விக்கிரகங்களில் வணங்கவேண்டும்? பசுவின் உடலெங்கும் பாலுக்கான சத்துகள் நிறைந்திருந்தாலும், அது காம்பின் வழியேதான் வருகிறது. அது போல உலகெங்கும் இறையருள் நிறைந்திருந்தாலும், மனிதன் தனக்கான இறையருளை விக்கிரகத்தின் வழியேதான் பெற்றுக்கொள்கிறான்.

அடுத்த கேள்வி: ஏன் சரஸ்வதி, லட்சுமி, சக்தி என்று பலவேறு உருவங்களில் இறையை வணங்கவேண்டும்?

ஒவ்வொரு மனிதனின் தேவையும் வித்தியாசமானவை. மாணவனுக்கு கல்வி வேண்டும், வியாபாரிக்கு செல்வம் வேண்டும், போர்வீரருக்கும் வீரம் வேண்டும். நாம் எதனை வணங்குகிறோமோ எதனை போற்றுகிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

எல்லையற்ற சக்தி கொண்ட பரம்பொருள் ஆயிரக்கணக்கான உருவங்களில் இருக்க சக்தி அற்றதா? நிச்சயம் இல்லை. ஆயிரக்கணக்கான உருவங்களில் இருக்கும் அனைத்தும் இறையே. அது எல்லா இந்துக்களுக்கும் தெரியும்.

விக்கிரகத்தில் இருப்பதால், விக்கிரகத்துக்கு வெளியே இறை இல்லை என்று பொருளா என்ன? ஆகவே முழு இறையை உணர்வது எவருக்கும் எளிதல்ல. அதனால்தான் தேவர்களும் அசுரர்களும் உணர முடியாத பொருள் என்று இறையை கூறுகின்றன இந்து வேதங்கள். இறைவனை பற்றி கூறும்போது கோடிக்கணக்கான வேதங்களாலும், பாடல்களாலும் கூற முடியாத இறை என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. (ஆனால் ஒரு சிலர் ஒரு புத்தகத்தினுள்ளே இறைவனை பற்றி எல்லாம் சொல்லப்பட்டுவிட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்காக பரிதாபமே பட முடியும்)

நம்முடைய முகத்தை சற்று மெருகேற்றி ஒரு சிலைவடித்தால் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் மனிதன், தன்மைவிட தரம் தாழ்ந்த இனத்தோடு ஒப்பிடும் போது அதை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அது தன்னை அவமானப்படுத்துவதாக கருதுகின்றான். அப்படியிருக்க இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு மட்டும் இவ்வுலகத்தில் உள்ள அற்பவஸ்துக்களில் ஒன்றைப்போல் உருவாக்கி இது தான் நம்மையெல்லாம் படைத்த சிருஷ்டிகர்த்தா என்றால் அது எப்படி இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்? என்று அறியாதவர்கள் கேட்கிறார்கள்.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனிடம் ஒரு மனிதனின் ஆசை, குணங்கள் கோபங்களை போட்டு இறைவனை தாழ்த்துவது இவர்களே. மலரிலும், குரங்கிலும், ஆற்றிலும் மரங்களிலும், காற்றிலும் ஆகாயத்திலும் நீக்கம்ற நிறைந்திருக்கும் இறைவனை ஒருவன் என்னுடைய இறைவன் என்று வரைவதால் இறை கோபம் கொண்டுவிடுமா? சிந்திக்க வேண்டும் சகோதரர்களே.

"இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்பதை இறைவன் தான் கற்றுத்தர வேண்டும். ஆனால் உலகில் காணப்படும் எந்தவொரு வேதகிரந்தமும் இறைவனுக்கு விக்கிரகம் வடித்து வைத்து வணங்குங்கள் அது உங்கள் மனதை ஓர்மைப்படுத்த உதவும் என்று கற்பிக்கவேயில்லை." என்று அறியாதவர்கள் கூறுகிறார்கள். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் தன்னை மற்றவர்கள் வணங்கவேண்டும் என்று விரும்ப எந்த ஒரு தேவையும் இல்லாதவன். ஏனெனில் வணங்குபவனும் வணங்கப்படுபவனும் ஒன்றே. ஆனால், மாயையில் சிக்கியுள்ள மனிதன், தன்னையே இறை என்று உணர இயலாத மனிதன், உலகப் பிரச்னைகளில் சிக்கி, தன்னுடைய நம்பிக்கையோடு ஒத்து போகாதவனை காபிர் என்று கூறி அழிக்கும் குணம் ஆகியவற்றில் சிக்கி அழிகிறான். அவன் தன்னை உணரவேண்டும் என்றால், "ஒரு புத்தகம் கடவுளை முழுவதும் சொல்லிவிட்டது" என்ற மாயையிலிருந்து முதலில் விடுபடவேண்டும்.

நேற்றுவரை தெருவில் இருந்த கல் ஏன் சிலையாக்கப்பட்டதும் வணங்கப்படுகிறது என்று அறியாதவர்கள் கேட்கிறார்கள். நேற்று தெருவில் கிடந்த கல்லும் இறையே. சிலை வடிக்கப்பட்டதும் இறையே. தெருவில் கிடக்கும் கல்லை தெருவில் கிடக்கும் கல் என்று பார்க்க வைப்பது மாயை. அதனை சிலையாக்கி வணங்கும்போது, இது முன்னால் தெருவில் கிடந்த கல் என்று மனிதனுக்கு தெரியும். ஏன், அவன் தானே அதனை வடித்தான். அப்போது அவன் மனம் விடுபடுகிறது. எங்கும் நீக்கம்ற நிறைந்திருக்கும் இறையை அவன் உணர்கிறான். அதனால்தான் "நேதி நேதி நேதி" (இதுவல்ல இதுவல்ல இதுவல்ல" என்று வேதம் உரைக்கிறது. கல்லாக பார்க்கும் வரை அது கடவுள் அல்ல. கல்லை கடவுளாக பார்க்கும் போது அது கடவுள்.
இதையே எளிமையாக கவிஞர் கண்ணதாசன் உரைத்தார்
"தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான்"

யூத, கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்கள் இதெல்லாம் புரியாமல், வெறுமே சிலை வழிபாட்டை எதிர்க்கின்றன. இது புரிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்துமதம் நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.

வாழ்க வளமுடன்

No comments: