Tuesday, July 15, 2008

சிறுபான்மை வாக்குவங்கிக்கு ஆசைப்பட்டு பண்டைய தமிழர் பண்பாட்டையும், வரலாற்றையும் திருத்தலாமா? - அருச்சுனன் சம்பத்

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080715120032&Title=Edit...
=

தன்நெஞ்சறிவது பொய்யற்க...

அர்ஜுன் சம்பத் கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்த இயேசுகிறிஸ்துவின் பன்னிரண்டு நேரடிச் சீடர்களில் ஒருவரான புனித தோமையரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்து அதற்குரிய தொடக்க விழாவை அண்மையில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடத்தி உள்ளனர்.

இந்த திரைப்படம் பல கோடி ரூபாய் செலவில் கிறிஸ்தவ மத நிறுவனங்களே நேரடியாகத் தயாரிக்கின்ற திரைப்படம் ஆகும். இதில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் தோமையராக நடிப்பதாகவும், தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மேற்படி
திரைப்படத்தின் தொடக்க விழாவில் சிறுபான்மை ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, மறைமாவட்டப் பேராயர்கள், மதபோதகர் பால் தினகரன் மற்றும் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

புனித தோமையர் 2000 வருடத்திற்கு முன்பாக இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அவர் கேரளக் கடற்கரையில் சில நாள்கள் தங்கியிருந்து கிறிஸ்துவின் மத போதனைகளைப் பரப்பினார். பிறகு அவர் சென்னைக்கு வருகை தந்து திருவள்ளுவரைச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். புனித தோமையரை சென்னை வாழ் மக்கள் அய்யர் என்று அன்புடன் அழைத்ததாகவும், சென்னையில் வசித்த பூர்வகுடித் தமிழர்
ஒருவர் தோமையரை ஈட்டியால் குத்திக் கொன்றதாகவும், தோமையர் உடல் தற்போதுள்ள சாந்தோம் கிறிஸ்தவ சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளனர்.

திருவள்ளுவர் வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இது தமிழருடைய வரலாற்றில் பொய் வரலாற்றைத் திணிக்கும் சதிச்செயலாகும்.

இத்தகைய முயற்சிகளை தமிழகத்து கிறிஸ்தவ மிஷனரிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். தோமையர் தமிழகத்திற்கு வருகை தந்தார் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது. இது தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் திரித்துக் கூறும் உள்நோக்கம் கொண்டதாகும். ஏற்கெனவே திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்றும், திருக்குறள் ஒரு கிறிஸ்தவ மதச் சார்பான நூல் என்றும் பொய்யுரை கூறி, இட்டுக்கட்டி, சில கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர்.

இதற்காக சில போலி ஆவணங்களைத் தயாரித்து பொய்ச்சான்றுகளை உருவாக்க பாதிரியார் ஒருவர் முயற்சி செய்தார். இது தொடர்பான வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளன. சாந்தோம் சர்ச்சில் கடந்த இருவருடங்களுக்கு முன்பாக மயிலை அன்னை சிலை அமைப்பு
விழாவில் கிறிஸ்தவ மதம் தொடர்பான சான்றுபொருள் ஆவணங்களின் நிரந்தரக் கண்காட்சி ஒன்றையும் தொடங்கி உள்ளனர். அதில் தோமையர் பயன்படுத்திய பொருள்கள் என்றும், தோமையர் காலத்துப் பொருள்கள் என்றும் சில பொருள்களை காட்சிக்கும் வைத்துள்ளனர்.

நாம் அப்போதே இது சம்பந்தமாக எதிர்ப்புத் தெரிவித்தோம்.

தமிழகத்திற்கு கிறிஸ்தவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் வந்தார்கள் என்பதுதான் உண்மை வரலாறு ஆகும். வாணிபம் செய்வதற்காக வாஸ்கோடகாமா கடல் வழி கண்டுபிடித்து இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அதன்பிறகு கிறிஸ்தவ மத போதகர்கள் வருகை தந்தனர்.

தமிழகத்திற்கு ராபர்ட்டிநொபிலி எனும் பாதிரியார் கிறிஸ்தவ மதபோதனை செய்ய வந்தார். அவர் உயர்குடி மக்களை மதம் மாற்றினார். அவர் தன்னை ஒரு பிராமண சந்நியாசி என்று மதம் மாறிய கிறிஸ்தவ மக்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டார்.

பண்டார சுவாமிகள் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு புனித அருளானந்தர் (ஜான்தோ பிரிட்டோ) போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை மதம் மாற்றினார்கள் என்பதுதான் கிறிஸ்தவ மதம் தமிழகத்தில் பரவிய வரலாறு.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக கிறிஸ்தவ மதத்தின் தலைமைப் பீடமான வாடிகன் நகரில் புனித தோமையரின் கல்லறை, ரோமில் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்யப்பட்டது. கிறிஸ்தவ மதத்தின் தலைமை போதகர் கார்டினல் போப்பின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியானது.

போப்பின் தலைமையில் இயங்கும் தமிழக கிறிஸ்தவ மதத்தலைவர்களும், கிறிஸ்தவ மத அமைப்புகளும் இது சம்பந்தமாக அப்போது மறுப்பு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

தாமஸின் கல்லறை தமிழகத்தில் சாந்தோமில் இருப்பதாகக் கூறவும் இல்லை.

இப்போது நமது தமிழ்நாட்டின் வரலாற்றைத் திருத்தி அமைக்கும் உள்நோக்கத்துடன் ஒரு பித்தலாட்ட வரலாற்றை நுழைக்க இவர்கள் முயற்சி செய்கின்றனர். சினிமா என்பது ஒரு வலிமையான தகவல் தொடர்பு சாதனம். சினிமா மூலம் தோமையர் தமிழகத்திற்கு வந்தார்.
திருவள்ளுவரோடு சமய விவாதங்களில் ஈடுபட்டார் என்பதெல்லாம் சாதாரண பாமர மக்களின் ஆழ்மனதில் பதிவு செய்யப்படும் அபாயம் உள்ளது.

திருவள்ளுவர் வாழ்ந்த காலம் என்று உத்தேசமாக தமிழக அறிஞர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கி.மு. 32-ம் வருடம் எனக் குறிப்பிட்டு திருவள்ளுவராண்டு நாள்காட்டி தமிழக அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது. காணும் பொங்கல் (தை 3) அன்று திருவள்ளுவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. திருவள்ளுவர் உருவத்தை பலரை வரையச்
செய்து தற்போதுள்ள தோற்றத்துடன் கூடிய உருவத்தைத் தேர்ந்தெடுத்து இப்படித்தான் திருவள்ளுவர் உருவம் இருந்திருக்கலாம் என முடிவு செய்து தற்போதுள்ள திருவள்ளுவர் படம் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவருடைய வாழ்க்கைக்குச் சான்று ஆதாரமாக அவர் எழுதிய திருக்குறள் மட்டுமே உள்ளது. திருவள்ளுவர் தொடர்பாக பல்வேறு விதமான நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் திருவள்ளுவர் எங்கள் மாவட்டத்துக்காரர் என்று அவர் தொடர்புடைய செய்திகளைச் சொல்லி சொந்தம் கொண்டாடி
வருகின்றனர்.

அவர் திருவல்லிக்கேணியில் வசித்தவர் என்றும், நெசவாளர் என்றும் சிலர்
கூறுவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

அவருக்கு வாசுகி என்கிற மனைவி இருந்ததாகவும், அவர் சிறந்த கற்புக்கரசி என்றும் தமிழக மக்கள் நம்பி வருகின்றனர். ஒளவையாரோடு திருவள்ளுவரை தொடர்புபடுத்தியும் பல சங்கதிகள் தமிழகம் முழுக்க நம்பப்படுகிறது.

பொதுவாக திருவள்ளுவர் காலம் என்பது 2000 ஆண்டுகளுக்கும் பழைமையானது என்று இறுதி செய்யப்படுகிறது.

இயேசு பிறந்து 2008 ஆண்டு ஆகிறது என்கிறது ஆங்கில நாள்காட்டி. தோமையர் இயேசுவின் நேரடிச் சீடர் ஆவார். இயேசு சிலுவையில் அறையப்பட்டபிறகு இந்தியாவிற்கு தோமையர் வந்ததாக கிறிஸ்தவ மத நூலான பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் இல்லை. புதிய ஏற்பாட்டிலும் இல்லை. அதிகாரபூர்வமான தலைமைபீடமோ, கிறிஸ்தவ மதத்
தொடர்பான நூல்களோ, கிறிஸ்துவமத வரலாறுகளிலோ எதிலும் தோமையர் இந்தியாவிற்கு வந்ததாகக் குறிப்பிடவில்லை.

தற்போது தோமையர் வரலாறு தொடர்பாக சாந்தோம் தேவாலயத்தில் காட்சிக்கு வைத்துள்ள சான்று பொருள்களை நவீன விஞ்ஞான சோதனைக்கு உள்படுத்தி நிரூபித்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. சாந்தோம் தேவாலய வரலாறு என்பது 300 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். 300 ஆண்டுகளுக்கு முன்பாக மயிலாப்பூரில் ஞானசம்பந்தரால் பாடல்
பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோயில் இருந்ததாகத்தான் தமிழக இலக்கியங்களும், வரலாறுகளும் கூறுகின்றனவே தவிர, சரித்திரபூர்வமாகத் தோமையர் மயிலையில் வாழ்ந்ததற்கான எந்தவிதச் சான்றும் இல்லை.

தோமையர் குறித்து இவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளை எல்லாம் கிறிஸ்தவ மதத் தலைமைப் பீடங்களே ஒப்புக்கொள்ளவில்லை. இயேசுவின் போதனைகளை தோமையர் இந்தியாவுக்குக் கொண்டு வந்தார். அவர் மலையாளக் கடற்கரையில் சிறிது காலம் இருந்தார். பிறகு சென்னை வந்தார். மதப் பிரசாரம் செய்தார் என்பதெல்லாம் இதற்கு முந்தைய கிறிஸ்தவ அறிஞர்கள் எவராலும் சொல்லப்படவில்லை.

குறிப்பாக தமிழ் கற்று பைபிளை தமிழில் வெளியிட்ட வீரமா முனிவர் என்று
அழைக்கப்படும் ஜி.யு. போப் போன்றவர்கள் கூட தோமையர் தமிழகத்தில் மதப் பிரசாரம் செய்துள்ளார் என்றெல்லாம் சொல்லவில்லை.

தமிழ் இலக்கியங்களிலும், தமிழக வரலாறுகளிலும் மயிலாப்பூர் வரலாற்றில் கூட தோமையர் கல்லறை இங்கு இருப்பதாகவோ அவர் தமிழகத்தில் மதப்பிரசாரம் செய்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை. புவியியல் ஆதாரம், கல்வெட்டு ஆதாரம், ஓலைச்சுவடி ஆதாரம், பண்டைய புத்தகங்களில் ஆதாரம், பழைய கட்டடங்கள் ஆதாரம், தொல்லியல் ஆதாரம்,
விஞ்ஞான ஆதாரம் எதுவுமில்லை.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மண்ணில் தமிழர் ஒருவர் தோமையரை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார் என்பதெல்லாம் எப்படிப்பட்ட மோசடி வரலாறு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதையெல்லாம் முத்தமிழ் அறிஞர் என்று அவரது தொண்டர்களால் பாராட்டப்படும் முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொள்கிறாரா? அல்லது கிறிஸ்தவ மக்களின் ஓட்டுக்காக தமிழக வரலாற்றை அடகு வைக்க முற்படுகிறாரா?

தமிழர் வரலாற்று கதை புனைவதில் வல்லவரான, தொல்காப்பிய பூங்கா, குறளோவியம் படைத்த தமிழக முதல்வர், இப்படி பொய்யான வரலாற்றுக்கு அங்கீகாரம் அளிக்கலாமா?

கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்கள் மதத்தைப் பரப்ப இத்தகைய கட்டுக்கதைகளைப் பயன்படுத்தலாம் என்பதே அநியாயமானது. கிறிஸ்தவ மத போதகர்கள் தங்களின் மதப்பிரசாரங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு மக்களைச் சேர்ப்பதற்கு இப்போதெல்லாம் சினிமா கவர்ச்சி நடிகைகள், நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோரை வைத்துப் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஏனென்றால் நடிகர், நடிகைகள் சொன்னால் பாமர மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதனை தமிழகத் தலைவர் எப்படி
ஆதரிக்கிறார், அங்கீகரிக்கிறார் என்பது புரியவில்லை.

அரசியல் காரணங்களுக்காக, சிறுபான்மை வாக்குவங்கிக்கு ஆசைப்பட்டு பண்டைய தமிழர் பண்பாட்டையும், வரலாற்றையும் திருத்தலாமா? இது தமிழர் வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் செய்யும் துரோகம் அல்லவா? அய்யன் திருவள்ளுவருக்கு இழைக்கும் அநீதி அல்லவா? தமிழ் ஆர்வலர்களும், தமிழ் பண்பாட்டுக் காவலர்களும் இது குறித்து
விழிப்புடன் இருக்க வேண்டாமா?

தமிழக முதல்வருக்கு திருவள்ளுவரின் தன்நெஞ்சறிவது பொய்யற்க என்னும் திருக்குறளை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

(கட்டுரையாளர்: இந்து மக்கள் கட்சித் தலைவர்)

No comments: