Tuesday, August 26, 2008

தென்காசி கொலைவழக்கில் ஜாமீனில் வந்த 4 பேர் போலீஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் கையெழுத்து

நெல்லை, ஆக.26-
தென்காசி இந்து முன்னணி பிரமுகர்கள் கொலைவழக்கில் ஜாமீனில் வந்த 4 பேரும் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டனர்.

இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை

தென்காசி இந்து முன்னணி தலைவர் குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டதையொட்டி தென்காசியில் இரு கோஷ்டியினரிடையே மோதல் நீடித்து வந்தது.

இதை தொடர்ந்து 14-8-2007 அன்று நடந்த மோதலில் குமார்பாண்டியனின் சகோதரர்கள் செந்தில், சுரேஷ், சேகர் உள்பட 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து இருபிரிவினரையும் கைது செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் செந்தில் உள்பட 3 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தென்காசியை சேர்ந்த அனிபா, அலாவூதின், செய்யது சுலைமான் சேட், செய்யது அலி ஆகிய 4 பேரும் தேசியபாதுகாப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைத்தனர். இதை அதற்கான கமிட்டி தள்ளுபடி செய்தது.

நிபந்தனை ஜாமீனில் விடுதலை

இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது. அவர்கள் தினமும் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக கையெழுத்து போட உத்தரவிட்டது. அதன்படி அனிபா, அலாவூதின், செய்யது சுலைமான்சேட், செய்யது அலி ஆகிய 4 பேரும் நேற்று மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டனர்.
இதையொட்டி மேலப்பாளையம் போலீஸ் நிலையம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

No comments: