Tuesday, August 19, 2008

ஹிஸ்டீரியா வழிபாடு, பேராயத்தில் ஊழல்கள் - ஒரு கிறிஸ்துவரின் மனம் திறந்த கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் பகிரங்க கடிதம் ஒன்றை ஒரு கிறிஸ்துவர் எழுதியுள்ளார். பார்வைக்காக இங்கே அந்த கடிதம்:

http://jeyamohan.in/?p=613

அன்புள்ள சகோதரரே,

உங்கள் கட்டுரையில் நீங்கள் இந்துத்துவர்கள் பற்றி சொல்லியிருந்தவற்றை நான் பெரிதும் ஆதரிக்கிறேன். இந்துத்துவவாதிகள் ஒரு வெறுப்பையும் அச்சத்தையும் உருவாக்குகிறார்கள். இந்த வெறுப்பும் அச்சமும் இங்குள்ள கிறித்தவ மேலாதிக்கக்காரர்களால் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக கிறிஸ்தவ சமூகத்தின் நடுவே வளர்க்கப்படுகின்றன. நீங்கள் எங்களை ஏற்று நாங்கள் செய்வதை எல்லாம் கேள்வி கேட்காமல் பணியாவிட்டால் உங்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று கிறிஸ்தவ மதஆதிக்க அமைப்புகள் கிறிஸ்தவ எளிய மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடிக்கு அம்மக்களும் அடிபணிகிறார்கள். இந்த இருமுனை ஆதிக்கம் தான் இப்போது நடக்கிறது. ஒரு மதத்தைச் சுட்டிக்காட்டி அச்சுறுத்தி இன்னொரு மதத்தின் ஆதிக்க சக்திகள் தங்கள் நலன்களை பேணிக் கொள்கின்றன.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நான் பலகாலமாக சி.எஸ்.ஐ பேராயத்தில் நிகழ்ந்துவரும் ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிராக போராடிவருபவன் [இந்தவிஷ்யங்களைச் சொல்ல வேண்டியதில்லை. செய்தித்தாள்களில் போதிய அளவுக்கு நாறி விட்டது] இங்கே இருக்கும் இரு குழுக்களுமே என்னை இந்துத்துவ சக்திகளின் கையாள் என்று சொல்லி பிரச்சாரம் செய்கின்றன. அதாவது ஒரு பேராயர் பணமோசடி செய்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். நாம் கணக்கு கேட்டால் நம்மை இந்துத்துவ ஒற்றன் என்று சொல்லி வசைபாடி ஒதுக்கிவிடுவார்கள். இது இன்று எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் நடந்துகொண்டிருப்பது. நீங்கள் போகிற போக்கில் விசாரித்தால்கூட இந்து தெரியவரும். எல்லா கிறிஸ்தவ நிர்வாகக் குழு விசாதங்களிலும் மாறிமாறி ஆர்.எஸ்.எஸ் கையாள் என்று குற்றம்சாட்டி வசைபாடிக் கொள்வதை இப்போது காணலாம். இந்த ·போபியா ஒரு பெரிய ஆயுதமாக நம்முடைய பேராயர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கையில் இருக்கிறது. இந்துத்துவாவின் மோசமான பாதிப்பே இதுதான்.யாரைவேண்டும்னானாலும் நாம் அப்படிக் குற்றம்சாட்டிவிடலாம்.

இந்தச் சூழலில்தான் நீங்கள் இப்போது நடப்பவற்றைக் காணவேண்டும். இன்று சி.எஸ்.ஐ, கத்தோலிக்க திருச்சபை இரண்டுமே அப்பட்டமான ஊழலாலும் எல்லையில்லாத நில மோசடிகளினாலும் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. பலகோடி ரூபாய்கள் வருகின்றன. வந்த சுவடே தெரியவில்லை. அதிகார மையங்களுடன் தொடர்புள்ள பியூன்கள் கூட கோடீஸ்வரர்களாக ஆகிறார்கள். பணத்துக்காக நடக்கும் சண்டைகள் முற்றி தெருவுக்கு வருகின்றன. கைகலப்புகள், ஆள்கடத்தல்கள் எல்லாம் சாதாரணமாக நடக்கின்றன. கிறிஸ்தவ சேவைகள் நாளிதழ்களில் வந்த காலம் இன்று இல்லை. கிறிஸ்தவ சபைக்குள் நடக்கும் வெட்டுகுத்துக்கள் தினமும் செய்தித்தாள்களில் இடம்பெறுகின்றன. போதகர்களை பொதுமக்கள் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள் என்று நீங்கள் நாளிதழ்களில் காணலாம். இந்த அளவுக்கு சீரழிந்த நிலை திருச்சபைகளின் வரலாற்றில் எப்போதுமே இருந்ததில்லை.

ஒரு சி.எஸ்.ஐ பேரயர் தேர்வுக்கு சராசரரியாக ஐந்துகோடி ரூபாய் வரை வேட்பாளரால் செலவிடப்படுகிறது தெரியுமா? வென்றால் ஒரே வருடத்தில் அந்தப்பணத்தை எடுத்துவிடலாம். கத்தோலிக்க சபைகளில் ‘சரியான’ பங்குகளில் ‘போஸ்டிங்’ போடப்படுவதற்கான ஐம்பதுலட்சம் வரை லஞ்சம் கொடுக்கப்படுகிறது. ஒரு போலீஸ் எஸ்.பியின் இடமாறுதலுக்குக் கூட இந்த அளவுக்கு பணம்செலவிடப்படுவதில்லை!

இந்த ஊழலால் இன்று சி.எஸ்.ஐ, கத்தோலிக்க திருச்சபை இரண்டுமெ இப்போது மதமாற்றம் எதிலும் ஈடுபடுவதில்லை. சொல்லப்போனால் சி.எஸ்.ஐ சபையானது இந்த சபைக்குள் உள்ள நாடார் அல்லாதவர்களை வெளியே தள்ளிவிடுவதில்தான் முனைப்பாக உள்ளது. மதமாற்ற அமைப்புகள் உள்ளன. பணம் செலவாகிறது. ஆனால் வேலை நடப்பதில்லை. இன்று மதமாற்றம் செய்ய தீவிரமாக இருக்கக் கூடியவை பெந்தேகொஸ்தே சபை, யஹோவா சாட்சிகள் போன்ற சிறு அமைப்புகள்தான். அவர்கள் மிரட்டல் மோசடி என்று எல்லா உத்திகளையும் கையாள்கிறார்கள். அந்த சபைகளில் வந்துசேர்வதில் 5 சதமானம் பேர்தான் இந்துக்கள். மிச்சமெல்லாம் பிற கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்கள். அவர்களை எதிர்க்க முடியாமல் சி.எஸ்.ஐ, கத்தோலிக்க திருச்சபை இரண்டுமே அவர்களின் ‘ஹிஸ்டீரியா’ பிடித்த வழிபாட்டுமுறைகளை காப்பியடிக்கின்றன இப்போது.

சி.எஸ்.ஐ, கத்தோலிக்க திருச்சபை இரண்டுமே இப்போது சேவை எதையுமே செய்வதில்லை. சேவைநிறுவனங்கள் அனைத்துமே பணமில்லாமல் முடங்கி பக்கவாதம் பிடித்து கிடக்கின்றன. உண்மையும் அர்ப்பணிப்பும் உள்ள ஏராளமான சேவைக்காரர்கள் இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டு மனம் வெதும்பிப்போயிருக்கிறார்கள். ஏன், சுனாமியையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்து அமைப்புகள் அவர்களுக்கு செய்துகொடுத்ததில் பாதியைக்கூட இவ்வளவுபெரிய சி.எஸ்.ஐ, கத்தோலிக்க திருச்சபைகள் செய்யவில்லை. பலகோடி ரூபாய் வந்து போன இடமே தெரியவில்லை.

இதையெல்லாம் காடாத்துணிபோட்டு மறைக்கவே தோமஸ்கிறித்தவ கோட்பாடு தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் போன்ற மோசடிகளை உருவாக்குகிறார்கள். இதைச்சொல்லி பலகோடி ரூபாய் கறப்பார்கள். இந்துமதம் மேல் வெறுப்பை கக்குவார்கள். அதை எதிர்த்து இந்துக்கள் என்ன சொன்னாலும் அதையெல்லாம் இந்துத்துவ சக்திகள் கிறித்தவர்களை கொல்வதற்காகச் செய்யும் சதிகளாக சர்ச்சுகளில் முன்வைப்பார்கள். சாதாரண கிறிஸ்தவர்கள் அதை நம்புவார்கள். ஒட்டுமொத்தமான ஒரு மோசடியின் சிறு பகுதியாக நிகழும் மோசடிதான் இது. இதை இன்று ஒரு கிறிஸ்தவனும் எதிர்க்க முடியாது. எதிர்த்தால் இந்துத்துவ முத்திரை உறுதி.

வாழ்க இந்துத்துவம். அதன் ஆதரவாளர்களுக்கு அதனால் லாபம். அதன் எதிர்ப்பாளர்களுக்கு அதைவிட பெரு லாபம்.
ஊழியன்

இந்துத்துவம்:ஒரு கேள்வி

தாமஸ் கடிதங்கள் மீண்டும்

தாமஸ்:மேலும் கடிதங்கள்

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

No comments: